போலி பாஸ்போர்ட் பெண் கைது
சென்னை ஏர்போர்ட்டில் நிழல் மனிதன்: பாஸ்போர்ட் பெண்ணை வட்டமிட்ட கழுகு கண்! வெளிச்சத்துக்கு வந்த உண்மை
சென்னை ஏர்போர்ட்டில் நேற்று ஒரு அதிரடி சம்பவம் நடந்தது. வெளிநாட்டு நபர்கள் சிலர் தங்களது உண்மையான அடையாளத்தை மறைத்து, போலி ஆவணங்கள் மூலம் இந்தியக் குடியுரிமை பெற முயன்றது அம்பலமானது.
இது தொடர்பாக விமான நிலைய அதிகாரி கொடுத்த புகாரை அடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவின் போலி பாஸ்போர்ட் தடுப்புப் பிரிவு போலீசார் களத்தில் இறங்கி விசாரணையைத் தொடங்கியுள்ளனர்... இதில்தான் அந்த பெண் சிக்கி உள்ளார்..!!
சென்னை விமான நிலையத்தில், அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.. அப்போது இலங்கை செல்லும் விமானத்தில் பயணிக்க சென்னை விமான நிலையத்துக்கு வந்த பெண் ஒருவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள போலி பாஸ்போர்ட் புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரித்தனர்.
அப்போது, அந்த பெண்ணின் பெயர் பேபி லோனா (48). இலங்கை நாட்டுக் குடியுரிமை பெற்றவர். இந்தியரான முஸ்தாக்அகமது என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். பேபி லோனாவின் பெற்றோர்கள் இலங்கை நாட்டை சேர்ந்தவர்கள். கடந்த 2015-ம் ஆண்டு இலங்கையிலிருந்து விமானம் வழியாக இந்தியா வந்த இவர், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்துள்ளார்..
பாஸ்போர்ட் ஆவணங்கள்
தனது இலங்கை நாட்டு குடியுரிமையை முற்றிலுமாக மறைத்த பேபி லோனா, இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக ஊடுருவியது மட்டுமின்றி, இந்திய குடிமக்களுக்கு மட்டுமே உரித்தான ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை முறைகேடாக பெற்றுள்ளார். இந்த ஆவணங்களை ஆதாரமாக வைத்து இந்திய பாஸ்போட்டையும் பெற்றுள்ளார்.
இந்த போலி பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி மீண்டும் இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்றபோதுதான், சென்னை ஏர்போர்ட் அதிகாரிகளின் கழுகுக் கண்களில் சிக்கியுள்ளார்.
இதேபோல் மற்றொரு சம்பவத்தில், 28 வயதான நிஷாந்தினி என்ற இளம்பெண்ணும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது பின்னணி சற்று வித்தியாசமானது.
போலி ஆவணங்கள்
கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையிலிருந்து கப்பல் வழியாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமிற்கு இவரது பெற்றோருடன் வந்துள்ளார். கோவையில் பி.எஸ்சி பட்டப்படிப்பை முடித்த இவர், போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்று இலங்கைக்கு செல்ல முயன்றபோது கச்சிதமாகப் பிடிக்கப்பட்டார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் =அருணின் நேரடி உத்தரவின் பேரில், இந்த 2 பெண்களும் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்த போலி பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள், தற்போது ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
போலீஸ் அறிவுறுத்தல்
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, பொதுமக்களுக்குக் காவல் துறை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், "ஏஜெண்டுகள் மூலம் பாஸ்போர்ட் மற்றும் விசா பெற விண்ணப்பிக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வாயிலாக முறையான ஆவணங்களைச் சமர்ப்பித்து மட்டுமே கடவுச்சீட்டைப் பெற வேண்டும். வெளிநாடுகளுக்குச் செல்ல அந்தந்த நாட்டுத் தூதரகங்களை அணுகி மட்டுமே விசா பெற வேண்டும்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போலி ஆவணங்கள் தயாரிப்பது தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதால், இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை தொடரும் என சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Comments
Post a Comment