கரூர் சம்பவம் யார் யார் காரணம்?

 கரூர் சம்பவம் யார் யார் காரணம்? 


நடிகர் விஜய் அவர்கள் தனது அரசியல் ஆசையின் காரணமாக தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியினை உருவாக்கி தற்போது தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கரூரில் அவரது பிரச்சார கூட்டத்தில் 41 உயிர்கள் பலியாகி உள்ளது. இதற்கு யார் யார் காரணம் அவர்களுக்கு என்ன பொறுப்பு இருக்கிறது என்பதை பற்றி பார்க்கலாம். 


முதல் தவறு யார் மீது?


கரூரில் தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மீது முதல் தவறு என்பது எனது கருத்து. 




காரணம் விஜய் வருவதற்கு பல மணி நேரத்திற்கு முன்பாகவே அங்கு போய் பலரும் காத்திருந்துள்ளனர். அதிலும் அவரது ரசிகர்களும் தொண்டர்களும் சிறிது கூட பொறுப்பற்றவர்களாகவும் சிந்திக்கும் திறன் அற்றவர்களாகவும் அதுமட்டுமல்லாமல்மற்றவர்கள் சொல்லும் நல்ல அறிவுரைகளை கேட்கும் மனநிலையிலும் இல்லை. அவர்கள் விஜய் வாகனத்தை பின் தொடர்ந்து செல்வதும் போக்குவரத்துக்கு இடையூறு செய்வதும் மற்றும் பிரச்சாரம் நடக்கும் இடங்களில் மின்கம்பங்களில் ஏறுவதும் மரங்களில் ஏறுவதும் அங்கிருக்கும் கடைகள் மற்றும் வீடுகளின் மீது ஏறி தொங்குவதும் பலவித சேட்டைகள் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதை அவர்கள் ஏதோ பெரிய சாகசம் செய்வது போன்று எண்ணத்தில் செய்து வருகின்றனர். இது போன்ற ஒரு கூட்டத்தை கட்டுப்படுத்த தவறியது விஜயும் கூடத்தான். இது தெரிந்தே மக்கள் மீண்டும் பொதுக் கூட்டங்களுக்கு செல்வது ஆபத்து. எனவே ஒரு நடிகரை பார்ப்பதற்கும் அரசியல் அனுபவம் இல்லாத ஒருவர் வந்தவுடன் நம்மையெல்லாம் காப்பாற்றி ரட்சித்து பொற்கால ஆட்சியை தந்து விடுவார் என்று நம்பும் முட்டாள்களாகவே  நம் மக்கள் இருக்கின்றனர். 





இரண்டாவது தவறு 


திரு விஜய் அவர்களின் முந்தைய கூட்டங்களில் வந்த மக்கள் கூட்டத்தை பார்த்த பின்பும் அதுமட்டுமல்லாமல் அவரது ரசிகர்கள் செய்யும் அட்டூழியங்களை பார்க்க பின்பும் கரூர் மாவட்ட நிர்வாகம் தகுந்த முன்னேற்பாடுகளையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சரிவர செய்யாதது அவர்கள் குற்றம். 


 காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர செய்யவில்லை. காலையிலிருந்து கூட்டம் கூடி உள்ள நிலையில் முன்கூட்டியே கூட்டத்தை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்பதையும் விஜய் அவர்களின் பிரச்சார வாகன வந்து செல்வதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் முன்னேற்பாடுகளையும் செய்திருக்க வேண்டும். இது போன்று ஒரு பெரிய கூட்டம் வரும் என்பது அவரது முந்தைய கூட்டங்களை பார்த்தாலே தெரியும். அதற்கேற்றார் போல் மைதானங்களிலோ அல்லது விளையாட்டு அரங்கங்களிலோ அல்லது கரூரின் புறநகர் பகுதிகளில் உள்ள காலியிடங்களிலோ கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கலாம். மேலும் மக்கள் கூட்டம் அதிகமாகும் பொழுது ஆங்காங்கே தடுப்புகளை ஏற்படுத்தி மக்களை ஒரே இடத்தில் நெரிசலில் கூடுவதை தவிர்த்து இருக்கலாம். இதில் காவல்துறையும் அரசு நிர்வாகமும் முழு தோல்வி அடைந்துள்ளது. 


மூன்றாவது தவறு 

நடிகர் விஜய் அவர்கள் தொடர்ந்து தனது பொதுக்கூட்டத்திற்கு அறிவிக்கப்படும் நேரத்திற்கு சரியாக வருவதில்லை. மாறாக பல மணி நேரம் தாமதமாக வேண்டுமென்றே வந்து மக்கள் கூட்டத்தை தனது ஆயுதமாக பயன்படுத்த நினைத்ததன் விளைவு இந்த கோர சம்பவம். அவரது பலத்தை ஆளும் கட்சி எதிர்க்கட்சி போன்ற அனைவருக்கும் நிரூபிக்க வேண்டும் என்று அவர் விரும்பியதன் விளைவு இது போன்ற சம்பவம். மேலும் தமிழக வெற்றி கழகத்திற்கு இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தலைவர்கள் பெரிதாக யாரும் இல்லை. மேலும் அவர்களுக்கு இதுபோன்ற பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்த முன் அனுபவங்களும் இல்லை. மேலும் விஜய் அவர்கள் 234 தொகுதிகளிலும் விஜய் தான் போட்டியிடுகிறார் என்பது போன்ற தன்னையே முன் நிறுத்தும் படியான வார்த்தைகளை தெரிவித்ததன் மூலம் அவர் ஒரு சரியான கட்டமைப்பை ஏற்படுத்த முயற்சி செய்யவில்லை. அதன் பலனை தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்பது உண்மை. ஒரு அரசியல் கட்சி என்பது தனிமையிலிருந்து வார்டு வரை எல்லா நிலைகளிலும் சரியான கட்டமைப்போடு இயங்கினால் மட்டுமே வெற்றி பெறும் என்பது எனது கருத்து. 


இந்த துயர சம்பவத்தில் என்ன நடந்தது என்ற உண்மை நேர்மையான உண்மையான விசாரணை நடத்தினால் மட்டுமே தெரிய வரும். இது நிர்வாக குளறுபடிகளால் ஏற்பட்ட தவறா? அல்லது வேறு ஏதேனும் அரசியல் சூழ்ச்சிகள் உள்ளதா? என்பது குறித்து முடிவு விசாரணையின் இறுதியிலேயே தெரியவரும்.

Comments